பிரம்ம புராணம் - 2

 நைமிசாரண்ய வனம் மிகவும் அழகு வாய்ந்த பகுதியாகும்.பூத்துக் குலுங்கும் மரங்கள், செடி, கொடிகள், பறந்து திரியும் வித விதமான பறவைகள், ஓடித் திரியும் விலங்குகள், ஆங்காங்கு சல சலத்து ஓடும் ஓடைகள் ஆகிய பகுதிகள் நிறைந்துள்ள பகுதியான நைமிசாரண்யம்,யாருக்கும் உணவுப் பஞ்சமில்லாமல் இயற்கை வளங்களை வாரிக் கொடுக்கும் சிறப்புடையது.இக்காரணங்களால் பல முனிவர்களும்,ரிஷிகளும்,துறவிகளும் இவ்வனத்தில் வசித்து வந்தனர்.இயற்கை வளங்கள் நிரம்பியிருந்ததால் பல வேள்விகளும்,யாகங்களும் அங்கு நடைபெற்றன.


ஒருமுறை பல முனிவர்கள் கூடி ஒரு மிகப் பெரிய வேள்வியை நடத்தினர்.இங்கே உள்ள ரிஷிகள்,முனிவர்களும் போக இந்த வேள்வியினால் பல இடங்களிலிருந்தும் பல முனிவ ர்கள் வந்திருந்தனர்.அவருக்கு வேதவியாசரின் சீடராகிய உரோமஹர்ஷனரும் ஒருவர்.இப்பெயரே மருவி லோமஷனர் என வழங்கப் பெற்றது.பல புராணங்கள் வகுத்த வேதவியாசரின் சீடர் என்பதால் புராணங்களையும் அவற்றின் கதைகளையும் உரோமஹர்ஷனர் தன் குரு மூலம் கேட்டு அறிந்திருந்தார்.


உரோமஹர்ஷனரைப் பார்த்ததும் , வேள்விக்கு வந்த முனிவர்கள் அவரை சூழ்ந்து கொண்டு, வேத வியாசரிடம் கற்ற புராணங்களைப் பற்றித் தங்களுக்குச் சொல்லுமாறு வேண்டிக் கொண்டனர்.இந்த வேள்வி 12 ஆண்டுகள் தொடர்ந்து நடைபெற்றதால், உரோமஹர்ஷனர் விரிவான முறையில் ஒவ்வொரு புராணம் பற்றியும் முனிவர்களுக்குச் சொல்லத் தொடங்கினார்.


மிகப் பழைய காலத்தில் தட்சன்  முதலிய முனிவர்கள் பிரம்மனைக் கண்டு பூமியின் தோற்றம் பற்றிய வரலாற்றைத் தெரிவிக்க வேண்டினர்.நான்முகன் அளித்த விடையை அப்படியே வாங்கிக் கொண்ட வேதவியாசர் அவற்றை அப்படியே   தன் சீடன் உரோமஹர்ஷனருக்குச் சொல்ல, அவர் தான் கேட்டவற்றை சொல்ல ஆரம்பித்தார்.


தொடக்கத்தில் எங்கும் நீர் நிறந்திருந்தது.பரப்பிரம்மத்தின் வடிவமான விஷ்ணு அக்கடலின் மீது படுத்திருந்தார்.(தண்ணீருக்கு வடமொழியில் "நார"என்ற பெயருண்டு."அயன" என்ற சொல்லுக்கு படுக்கை என்ற பொருளாகும்.எனவே நீரின் மேல் உறங்கிய பரபிரம்ம சொரூபம்..நார+ஆயன=நாராயண என்ற பெயர் வந்தது).இந்தத் தண்ணீரிலிருந்து பொன்னாலான பெரிய முட்டை நீரின் வெளியே வந்தது.அதனுள் நான்முகன் இருந்தான்.பிரம்மன் தன்னைத்தானே தோற்றுவித்துக் கொண்ட சுயம்பு மூர்த்தி ஆவான்.ஓராண்டு ஆனதும் இம்முட்டை இரண்டாக பிளந்து கொண்டு பிரம்மன் வெளியே வந்தான்.முட்டையின் ஒரு பகுதி பரந்து ஆகாயமாகவும்,மற்றொன்று பூமியாகவும் மாற்றப்படலாயிற்று.இந்த பிரம்மம் எண்ணத்தின் மூலமாகவே ஏழு ரிஷிகளை உண்டாக்கின.அவர்கள் முறையே மாரீச்சி,அத்ரி,ஆங்கீரசா, புலஸ்தியா,புலஹா,கிரது,வசிட்டன் ஆகிய எழுவர் ஆவர்.பிரம்மன் இவர்களுடன் நிற்காமல் ருத்ரன் என்ற கடவுளையும், சனத்குமாரன் என்ற முனிவரையும் படைத்தான்.இவர்களோடு பிரம்மன் தன் உடலில் இருந்து ஒரு ஆணையும், பெண்ணையும் படைத்தான்.


இந்த ஆண் சுவயம்புமனு என்றும் பெண் ஷத்ரூபா என்றும் பெயர் பெற்றனர்.


அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டு தங்கள் குலத்தைப் பெருக்கினர்.மனுவின் பரம்பரையில் வந்ததால் மக்கள் "மானவர்கள்" என்று அழைக்கப் பட்டனர்.


மனுவிற்கும் ,ஹத்ரூபாவிற்கும் விரா, பிரியவிரதா,உத்தானபாதா என்ற மூன்று புத்திரர்கள் தோன்றினர்.இவற்றுள் உத்தானபாதாவின் மகன்தான் துருவன்.


தேவ வருஷங்கள் மூவாயிரம் வரை துருவன் செய்த தவத்தைக் கண்டு மெச்சி பிரம்மன் துருவனுக்குக் காட்சி தந்து..துருவ நட்சத்திரமாக அவன் விளங்குமாறு வரம் தந்தான்.


வடக்கேக் காணப்படும் சப்தரிஷி மண்டலத்தில் அடிப்பகுதியில் காணப்படுகிறது துருவ நட்சத்திரமாகும்..மூன்றாவது தலைமுறையாக "பிரசேதாஸ்"என்ற பெயருடன் பதின்மர் தோன்றினர்.உலகை ஆளப்பிறந்த இவர்கள் ஆட்சிப்பீடத்தில் அமராமல் தவம் செய்யும் நோக்கத்துடன் கடலுக்கு அடியில் சென்று பதினாயிரம் ஆண்டுகள் தவம் புரிந்தனர்.இதன் காரணமாக உலகை ஆள்பவர் இல்லாததால் உலகம் முழுதும் மரங்களும்,செடிகளும் அதிகரித்துவிட்டன.நெருக்கம் காரணமாக காற்றும் உள்ளே நுழைய முடியவில்லை.உலகம் துன்பத்தை அனுபவிக்கத் தொடங்கியது.இந்த செய்தி கடலுக்கடியில் இருந்த பிரசேதன சகோதரர்கள் கவனத்துக்கு வந்தது.இயற்கையின் இந்த சூழலை மாற்ற அவர்கள் தங்கள் வாயின் மூலம் நெருப்பையும்,காற்றையும் உண்டாக்கினர்.வனங்கள் எரிந்து சாம்பலாயின. 


(தொடரும்)

Comments

Popular posts from this blog

விஷ்ணு புராணம்

வாயு புராணம் (சிவ புராணம் ) - 21

வாயு புராணம் (சிவ புராணம்) - 11