பிரம்ம புராணம்

 14 - பில்ல தீர்த்தம்


வேதா என்றொரு முனிவர் சிவ பக்தியில் சிறந்து விளங்கினார்.நாள்தோறும் காலையிலிருந்து மாலைவரை சிவனை பிரார்த்தித்துவிட்டு ஊருக்குள் சென்று பிச்சை எடுப்பார்.கிடைத்த உணவில் பக்கத்தில் உள்ள காட்டில் இருந்த சிலலிங்கத்துக்குப் படைத்துவிட்டு பிறகு உண்பார்.இதேகாலத்தில் பில்லா என்றொரு வேடன் அந்தக் காட்டில் வசித்து வந்தான்.தினந்தோறும் மிருகங்களை வேட்டையாடி தன்னால் கொல்லப்பட்ட மிருகங்களின் புலாலை சிவலிங்கத்திற்குப் படைத்துவிட்டு எஞ்சியதைத்தான் உண்பான்.இவர்கள் இருவரும் ஒருவரைஒருவர் சந்தித்ததில்லை.ஆனால் வேதாவைப் பொறுத்த மட்டில் தான் வணங்கும் சிவலிங்கத்தைச் சுற்றி இறைச்சித் துண்டுகள் கிடப்பதைப் பார்த்தார்.முதலில் அதைப் பற்றி அவர் கவ்லைப்படவில்லை.என்றாலும் நாளாவட்டத்தில் ஒரு வேறுபாட்டினைக் கண்டார்.தான் படைத்த பொருள்கள் சிதறிக் கிடப்பதையும், இறைச்சித் துண்டுகள் சாப்பிட்டுப் போடப்பட்டவைப் போல ஒரு புறமாகக் குவிந்திருப்பதையும் கண்டு ,அதை வேடன் தான் செய்திருப்பான்  என நினைத்தார்.ஆனால், கல்வி அறிவு இல்லா வேடன் தினமும் இறைச்சியைப் படைக்கிறான் என்றால் அது வியப்பாக இருந்தது.யார் அது?என தெரிந்து கொள்ள வேண்டும் என ஒருநாள் ஒரு இடத்தில் மறைவாக நின்று கொண்டிருந்தார்.அன்று வேடன் தற்று தாமதமாக வந்தான்...இறைச்சியைப் படைத்தான்.சிவன் நேரில் எழுந்தருளி. "பில்லா..இன்று ஏன் தாமதம்?நீ வராததால் நான் பசியோடு இருந்தேன்.வேட்டை சரியாகக் கிடைகவில்லையா?"என்று கேட்டு விட்டு மறைந்தார்.பில்லா இறைச்சியைப் படைத்துவிட்டு மிச்சத்தை எடுத்துக் கொண்டுப் போனான்.சிவபெருமான் மீது மிகவும் கோபம் கொண்ட வேதா முனிவர்..சிவன் முன் நின்று"இது நியாயமா? தினமும் காலம் காலமாக பிச்சை  எடுத்ததை உனக்குப் படைத்துவிட்டு நான் உண்கின்றேன்.இதுவரை நீ எனக்குக் காட்சி தந்ததே இல்லை.ஆனால் கொலைத் தொழில் புரிந்து உயிர்களுக்குத் தீங்கு செய்யும் அந்த வேடனுக்குக் காட்சித் தந்தாய்.இதை என்னால் பொறுக்க முடியவில்லை.இந்தக் கல்லை எடுத்து உன் திருமேனியை உடைக்கப் போகிறேன்"என்றார்.உடனே சிவபெருமான் வெளிப்பட்டு "பில்லாவையும்,அவன் அன்பையும் நீ தெரிந்து கொள்ளவில்லை.நாளை வந்து பார்" என்று கூறி மறைந்தார்.  


மறுநாள் வேதா வந்தபோது லிங்கத்தின் உச்சியில் ரத்தம் ஒழுகிற்று.வேதா அதைத் துடைத்துவிட்டு வழக்கம் போல தன் பணிகளைச் செய்து விட்டு மறைவாக நிண்றார்.பின்னர் வந்த பில்லா, லிங்கத்தின் தலையில் ரத்தம் ஒழுகுவதுக் கண்டு பதைத்து விட்டான்.தான் ஏதோ குற்றம் செய்ததால்தான் இப்படிப்பட்ட நிலை லிங்கத்திற்கு எனக் கூறி..அம்பினை எடுத்து தன் உடலில் பல இடங்களிலும் குத்திக் கொண்டான்.ரத்தம் பெருகியது.அப்போது சிவன் வெளிப்பட்டு "வேதா..நீ சாத்திரப்படி செய்யும் பூஜைக்கும், அன்பே வடிவான இவன் பூஜைக்கும் உள்ள வேறுபாட்டினைப் பார்த்தியா?சாத்திரப்படி வழிபட்ட நீ பிரசாதத்தை என் கண் முன்னர் படைத்தாய்.அன்பினால் வழிபட்ட இவன் உடல்,பொருள், ஆவி மூன்றையுமே எனக்கு படைத்து விட்டான்.சாத்திர வழிபாட்டிற்கும்,அன்பு வழிபாட்டிற்கும் உள்ள வேற்றுமையை தெரிந்து கொள்"ஏன்று கூறி மறைந்தார்.பில்லா சிவனை வழிபட்ட இடம் "பில்ல தீர்த்தம்" என வழங்கப்படுகிறது. (பெரிய புராணத்தில் கண்ணப்பர் வரலாற்றை இத்துடன் ஒப்பிட்டுக் கொள்ளலாம்)

Comments

Popular posts from this blog

விஷ்ணு புராணம்

வாயு புராணம் (சிவ புராணம் ) - 21

வாயு புராணம் (சிவ புராணம்) - 11